Thursday, January 29, 2009

ஈழத் தமிழர் படுகொலை: இந்திய அரசினை கண்டித்து சென்னையில் இளைஞன் தீக்குளித்து தற்கொலை !

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு இன்று வியாழக்கிழமை காலை முத்துக்குமார் எனும் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் "பெண்ணே நீ" மாத இதழில் நிருபராக முத்துக்குமார் பணியாற்றி வந்தார். அதற்கு முன்பு தொலைக்காட்சி தொடர்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
சென்னை கொளத்தூர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்த இவருக்கு வயது 30.
தமிழ் மீது அதிகம் ஆர்வம் கொண்ட இவர் எப்போதும் தமிழர்கள் குறித்து ஆர்வமாக பேசுவார்.
குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாகவும் ஈழத் தமிழர்கள் தொடர்பாகவும் அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் அடிக்கடி உரையாடிக் கொள்வாராம்.
கடந்த சில மாதங்களாக இலங்கையில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படுவது முத்துக்குமாரின் மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அலுவலகத்துக்கு இன்று காலை 10:30 நிமிடமளவில் வந்த அவர் கையில் மண்ணெய் கலனை கொண்டு வந்து இருந்தார்.
ஈழத் தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும் அவர்களை காப்பாற்றக்கோரியும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை கண்டித்து முழக்கமிட்டபடி மண்ணெயை தன் மீது ஊற்றினார். பிறகு தீயை பற்ற வைத்தார். உடல் முழுக்க தீ பற்றி எரிய அவர் சாஸ்திரி பவனுக்குள் அங்கும் இங்கும் அலறியபடி ஓடினார்.
திடீரென ஒரு வாலிபர் தீப்பிடித்த உடலுடன் ஓடுவதை கண்டதும் சாஸ்திரி பவன் வளாகத்தில் நின்றிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப்பகுதி முழுக்க பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமார் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார்.
அவர் மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு கரிக்கட்டையாக உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முத்துக்குமாரை மீட்டனர். அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
காவல்துறையினர் அவர் வைத்திருந்த பொருட்களை சோதனையிட்டனர். அப்போது 14 அம்ச கோரிக்கை அடங்கிய ஒரு துண்டுப்பிரசுரத்தை முத்துக்குமார் வைத்திருப்பது தெரிந்தது.
அது தொடர்பான விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் நிலையில் முத்துக்குமார் உடல்நிலை மோசமானது.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவர் வைத்திருந்த துண்டுப்பிரசுரத்தில், "விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். காலம் கடந்த நீதி, அநீதிக்கு சமமானது'' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
முன்னதாக காவல்துறையினர் முத்துக்குமாரிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர் கூறியதாவது:

எனது பெயர் முத்துக்குமார், எனது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் கொழுவை நல்லூர் ஆகும்.
எனது தந்தை தாம்பரத்தில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். எனக்கும் அவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது.
எனவே நான் கொளத்தூரில் உள்ள எனது சகோதரி தமிழரசியுடன் வசித்து வருகிறேன். இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும்.
மத்திய அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக்கொண்டேன்.
வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் மத்திய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன்.
இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களில் நிறைய புத்திசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது.
அண்ணன் பிரபாகரனுக்கு உடனடியாக தகவல் தெரிவியுங்கள். திருமாவளவனுக்கும் தகவல் கொடுங்கள். பிரபாகரன் கில்லாடி. எப்படியாவது நான் எரிந்து கொண்ட தகவலை தெரிந்து கொள்வார் என முத்துக்குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் விநியோகித்த துண்டுப்பிரசுரம் விபரம் வருமாறு:
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.
உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.
வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.
ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?
ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.
மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?
கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல.
காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.
உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.
ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.
உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புக்களையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்’ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலிஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.
ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?
வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் (they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது.
நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது.
ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.

ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.
உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா?
அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.
இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Thursday, January 22, 2009

பெட்ரோல் விலையேற்றமும் பொருளாதார தடுமாற்றமும்!


பெட்ரோல், டீசல் விலை அவ்வப் போது உயர்வதும் விலையேற்றத்தைக் கண்டித்து எதிர்கட்சி போராட்டம் நடத்துவதும், கண்டன அறிக்கைகள் விடுவதும் நம் நாட்டில் வாடிக்கையாகி விட்டது. இந்த போராட்டங்கள் எல்லாம் வெறும் கண்துடைப்பாகவும் அரசியல் லாபத்திற்காகவும் நடத்தப்படுகிறது.
இன்றைய எதிர்கட்சி நாளைய ஆளும் கட்சியானாலும் பெட்ரோல் விலை ஏறத்தான் போகிறது. இதனால் பாதிக்கப்படுவது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள்தான். இன்றைய நவநாகரீக காலத்தில் பெட்ரோலிய பொருட்கள் அத்தியாவசியமாகிவிட்டது. இவற்றில் விலைவாசி சிறிதளவு ஏறினாலும்கூட அது பெரிய பாதிப்பைதரும். அரசின் பொருளாதார வளர்ச்சியையே பதம் பார்த்துவிடும். பெட்ரோலுக்கு அவ்வளவு பவர் உருவாகிவிட்டது.
அப்படிதான் சென்ற மாதமும் நடந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது. கடந்த 2004-ம் ஆண்டு 30 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை தற்போது 135 டாலருக்கு மேல் அதிகரித்து உள்ளது. அதற்கு ஏற்றப்படி பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தாமல் இருந்தால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம்.
அதாவது ஆண்டுக்கு ரூபாய் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி. பதறிப்போன எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சரிக்கட்ட பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துமாறு கேட்டுக்கொண்டன. மத்திய அரசும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் விலையை 5 ரூபாயும், கியாஸ் சி-ண்டர் விலையை 50 ரூபாயும் உயர்த்தியது. மண்ணெண்ணை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த விலை உயர்வின் மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு 21 ஆயிரத்து 123 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும். ஆக பெட்ரோல் நிறுவனங்கள் எவ்வித பாதிப்புமின்றி தப்பித்துக் கொண்டன. முத-ல் ஏன் இந்த விலையேற்றம் என்பதை பார்த்துவிடுவோம்.
உலகில் அதிக பெட்ரோல் வளம் கொண்ட நாடுகள்
அரேபிய நாடுகள்தான். அவற்றில் அல்ஜீரியா, அங்கோலா, ஈக்வடார், இந்தோனேசியா, ஈரான், ஈராக், குவைத், -பியா, நைஜுரியா, கத்தார், சவுதி
அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வெனிசுலா ஆகிய 13 நாடுகள் வசம் உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 40 சதவீதம் இருக்கிறது. இந்த நாடுகளெல்லாம் இணைந்து ஒபெக் (OPEC - Organisation of Petroleum Exporting Countries)என்ற அமைப்பை கொண்டுள்ளன. இந்த அமைப்புதான் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விலையை நிர்ணயம் செய்துவருகின்றன. அதிகமான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து விடக்கூடாது அதே சமயம் விலையும் குறைந்து விடக்கூடாது என்பதில் இந்த அமைப்பு கவனமாக இருக்கிறது. நமது கூட்டணிக்கட்சி ஆட்சியை போல. ஆட்சியும் நடத்த வேண்டும், ஆட்சியில் பங்கையும் கொடுத்துவிடக் கூடாது.
நவம்பர் 2006 -ல் எண்ணெய் விலை பீப்பாய்க்கு (1 பீப்பாய் 153 லிட்டர்) 50 டாலருக்கும் கீழே போய்விடக் கூடாது என்பதற்காக, தினசரி உற்பத்தியை 17 லட்சம் பீப்பாய்கள் வரை குறைத்தன. இப்போது மூன்று மாதங்களில் தினசரி உற்பத்தியை 3 கோடியே 23 லட்சம் பீப்பாய்களாக இருந்து வருகிறது. ஆனால் இந்த ஓபெக் நாடுகள் உழவர் சந்தையை போன்றது. உற்பத்தி செய்தவர்களே விலைவைத்து விற்கின்றனர். இவர்கள் இந்த விலையேற்றத்துக்கு காரணமல்ல. விவசாயிகள் விளைவித்த உணவுதானியங்களை ஆன்லைன் வர்த்தகம் மூலம் பதுக்கி, செயற்கையான விலையேற்றத்தை உருவாக்குபவர்கள் எப்படியோ, அப்படித்தான் கச்சா எண்ணெய் கள்ளமார்க்கெட்டால் தான் இன்று விலை தாறுமாறாக ஏறிவிட்டது. இதற் கான முழு முதல் காரணமே அமெரிக்காதான்.
அமெரிக்கா தொடர்ந்து உலகில் பொருளாதார ஆதிக்கத்தை நடத்தி வருகிறது. இன்றைய நூற்றாண்டில் பெட்ரோல் எண்ணெய்தான் தங்கத்துக்கு அடுத்த பொக்கிஷம். அதாவது திரவ தங்கம் (Liquid Gold). இதன் இருப்போ நிலையானது கிடையாது. இவற்றிற்கான தேவை என்றைக்கும் குறையாது. தேவை ஏறஏற, விலை கூடிக் கொண்டே போகும். இதில் போட்ட பணம் பலமடங்கு லாபத்தைத் தரும்.
அதேபோல பெட்ரோல் இருப்பு தனது கையிருப்பில் அதிகரிக்க அதிகரிக்க உலக பொருளாதார ஆதிக்கம் செலுத்தலாம் என்ற எண்ணத்துடன் அமெரிக்கா செயல்படுகிறது.
அமெரிக்காவின் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிகம் இருப்பது பெட்ரோலிய பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு அரேபிய நாடுகளில் பெட்ரோல் நிறுவனங்களையும் அமைத்து ஆதிக்கம் செலுத்துகிறது அமெரிக்கா. இதனால் பெட்ரோல்மீதான அமெரிக்காவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைக்கு ஓபெக் அமைப்பின் கட்டுபாட்டை மீறி எண்ணெய் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதில் அமெரிக்காவின் கை ஓங்கி இருக்கிறது. அதனால்தான் எப்போதெல்லாம் டாலரின் மதிப்பு சரிகிறதோ அப்போதெல்லாம் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது. ஆக இன்றைக்கு விலை நிர்ணயிக்கும் திறன் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கையிலிருந்து நழுவி அமெரிக்கா போன்ற இடைத்தரகு நாட்டின் கையில் சிக்கிக் கொண்டது. சென்ற மாதங்களில் தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்ததை கண்டோம். அதே ஆன்லைன் வர்த்தகத்தின் யூக வாணிகம்தான் பெட்ரோலியத்திலும் நடக்கிறது. கடந்த வருடங்களில் பீப்பாய் ஒன்று 60 டாலருக்கு இருந்தது. இன்று 135 டாலருக்கு வந்துவிட்டது. இதில் 75 டாலர் என்பது யூக வாணிகம்தான்.
பெட்ரோல் விலையை பாதிக்கும் இன்னொரு அம்சம் அரசாங்கங்கள் போடும் வரி. அதாவது எக்சைஸ் வரி, கஸ்டம்ஸ் வரி, கல்வி வரி, டீலர் கமிஷன், வாட் வரி, போக்குவரத்துச் செலவு போன்றவை. இவையெல்லாம் பெட்ரோல் பொருட்கள்மீது போடும் போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கும் சுமார் 28 ரூபாய் வந்துவிடுகிறது. அடக்க விலை சுமார் 22 ரூபாய் சேர்ந்து
லிட்டர் பெட்ரோல் 50 ரூபாயைத் தாண்டிவிடும்.
இந்த முறை பெட்ரோல் விலையை ஏற்றிவிட்ட கையோடு மத்திய அரசு இவற்றின் மீதான வரியை குறைத்துள்ளது. பெட்ரோல் மற்றும் அதிவேக டீசலுக்கு தற்போது 7.5 சதவீத சுங்கவரி விதிக்கப்பட்டு வருகிறது. இது 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இவற்றின் மீதான உற்பத்தி வரியும் ரூ.1 குறைக்கப்படுகிறது. தற்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 14.35-ம், அதிவேக டீசலுக்கு ரூபாய் 4.6-ம் உற்பத்தி வரியாக விதிக்கப்படுகிறது. இதர பெட்ரோலியம் பொருட்களுக்கான விமான பெட்ரோல், நப்தாவுக்கு சுங்கவரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி
குறைப்பு மூலம் அரசுக்கு 22 ஆயிரத்து 660 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இதை தொடர்ந்து தமிழக அரசு டீசல் விலை உயர்வை சற்று குறைக்கும் வகையில் அதன் மீதான விற்பனைவரியை 2 சதவீதம் குறைத்துள்ளது. ஆனால் இது போதாது. தற்போது தமிழகத்தில் பெட்ரோல் மீது 30 சதவீதமும், டீசல் மீது 25 சதவீதமும், விற்பனைவரி விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான விற்பனைவரி அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்று கூறப்படுகிறது. இதில் கேலிக்கூத்தான விஷயம் என்னவென்றால் தமிழக முதல்வர் கேளிக்கைக்கு முழுமையான வரிவிலக்கு அளித்துள்ளார்.
அதாவது சினிமாவுக்கு தமிழில் பெயர்வைத்தால் வரிவிலக்கு. பலகோடிகள் புரளும் சினிமாவில் இந்த வரிவிலக்கால் பலகோடி அரசுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு. ஆனால் மக்களின் அத்தியாவசிய பயன்பாடான டீசல் மீது 2 சதவீத வரிகுறைப்பு என்பது மிகவும் குறைவு.
இந்தியாவில் 18 எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 17 அரசு பொது நிறுவனங்கள். ஒன்று தனியார் நிறுவனம் (ரிலையன்ஸ் பெட்ரோலியம்) இந்த ரிலையன்ஸ் நிறுவனம் 2005-06 இல் 5915 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்தது. அடுத்த இரண்டே வருடத்தில் 2007-07 இல் இந்த லாபம் 10,372 கோடியாகிவிட்டது. இந்த லாபத்தின் மீது வரி போட எந்த அரசும் முன்வரவில்லை. மற்ற பொதுத்துறை நிறுவனங்களும் பெட்ரோல் வியாபாரத்தில் பெரும் லாபம் அடைந்து வருகின்றன. இவை தன்னாட்சி உரிமை கொண்டவை. இவற்றின் லாபம் மத்திய அரசின் வரி இல்லாத வருவாய் இனத்தில் சேரும். நஷ்டத்தை மத்திய அரசுதான் சுமக்க வேண்டும்.
இந்தநிலையில் மே மாத இறுதியில் பெட்ரோலியப் பொருட்கள் விற்பனையாளர்களின் கமிஷன் தொகையை மத்திய அரசு உயர்த்தி கொடுத்து,
அந்த சுமையை மக்கள்மீது சுமத்தியது. இவையெல்லாம் கலையப்பட வேண்டும். பெட்ரோலியத்தை தவிர்த்து, மாற்று எரிசக்திக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். குறிப்பாக சி.என்.ஜி
எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்த வேண்டும். அதனால் சூழல் மாசுபடுவதும் குறையும், கட்டணமும் குறையும். அதேபோல பெட்ரோலில் எத்தனால் கலந்து பயன்படுத்தும் முறையினால் பெட்ரோல் செலவைக் குறைக்க முடியும். இந்தியாவில் சர்க்கரை ஆலைகளி-ருந்து ரசாயனத் தொழில் தேவைகளுக்குப் போக எஞ்சிய எத்தனால்
அளவே 120 கோடி லிட்டர் வரை இருக்கிறது. இவைகளை பயன்படுத்தப்பட வேண்டும். மக்கள் நலன் கருதி சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்தால்தான், எதிர்காலத்தில் உணவுக்கும் எரிசக்திக்கும் பாதுகாப்பு வழங்க முடியும், இல்லையென்றால் எரிப்பொருள் நமது பொருளாதாரத்தை விழுங்கி ஏப்பம் விட்டுவிடும்.
- பிதாமகன்

சர்வதேச வானியல் ஆண்டு 2009 !



"வானத்தை பாருங்கள், அது உண்மையைச் சொல்லும்.
டெலஸ்கோப் மிகவும் நம்பகமானது. போப்பைக் காட்டிலும்''
- கலீலியோ கலிலி
ந்த ஆண்டை சர்வதேச வானியல் ஆண்டாக (International Year of Astronomy 2009) ஐ.நா. சபை அறிவித்துள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்பு 1609-இல் கலீலியோ தனது தொலைநோக்கி மூலம் கோள்களை ஆராய்ந்து கூறினார். "சூரியக் குடும்பத்தின் மையப்பகுதி சூரியன். அதனைசுற்றியே பூமி வலம் வருகிறது என்று கூறினார். இதனை நம்ப மறுத்த மதவாதிகளுக்காக பொதுமக்களுக்கு முன் செய்முறை விளக்கத்தை அளித்தார். தனது கண்டுபிடிப்பை மக்கள் மத்தியில் தொலைநோக்கி வழியே பார்க்க செய்தார். வானை நோக்கி தொலைநோக்கியை திருப்பிய அந்த ஆண்டிலிருந்து நவீன அறிவியலின் பெரும் புரட்சி தொடங்கியது.
மக்களிடம் தன் கண்டுபிடிப்பை முதலில் எடுத்துச் சென்ற விஞ்ஞானி கலீலிலியோதான். கிருத்துவ திருச்சபைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்கள் நம்மை உறைய வைத்துவிடும். அந்த உக்கிரமான போராட்டம், "மனித வரலாற்றில் முக்கிய மைல்கல்' என்று கம்யூனிச சிந்தனையாளர் பிரடெரிக் எங்கெல்ஸால் புகழ்ந்துரைக்கப்பட்டது.
ஐரோப்பகண்டம் கிருத்துவ கத்தோலிக்க திருச்சபையின் ஆதிக்கத்தின் பிடியில் பல நூற் றாண்டுகள் இருந்தது. மானுடத்திற்கு பகுத்தறிவு அளித்து அறிவு புரட்சி செய்ய வந்த பல மகத்தான விஞ்ஞானிகள் ஒடுக்கப்பட்ட காலமது. அப்படி யொரு காலத்தில்தான் கலீலிலியோ கலிலி இத்தாலியில் பிறந்தார். மருத்துவ படிப்பை பயின்று வந்தவர் விருப்பமில்லாமல் பாதியிலேயே விட்டுவிட்டு கணிதத்தை படித்தார். பேராசிரியராகப் பணியாற்றி பல அறிவியல் கருத்துக்களை எடுத்துரைத்தார். அறிவியல் கருத்துக்கள் தத்துவார்த்தமாக கூறப்பட்டு வந்த காலத்தில், முதன்முதலாக செய்முறையின் மூலம் அறிவியல் கருத்துக்களைச் வெளியிட்ட பெருமை கலீலிலியோவை சாரும்.

1609-இல் தாமஸ் ஹரியோட் மற்றும் சிலருடன் சேர்ந்து தொலைநோக்கியை வடிவமைத்தார். இதன் வழியே வான்வெளியை ஆராய்ந்து சூரியன் மையப்பகுதி என்று கூறினார். இங்குதான் அவருக்கு எதிர்ப்பு ஆரம்பமாகியது. பல நூற்றாண்டுகளாக பூமிதான் பிரபஞ்சத்தின் மையப்பகுதி என்றும் அதனையே சூரியன் சுற்றிவருகிறது என்றும் நம்பப்பட்டுவந்தது. இதற்கு பூமி மையக் கோட்பாடு (Geocentric Theory) என்று பெயர். இதனை தாலமி (கிபி.85-165) கூறினார். இவரது கருத்து கிருத்துவ மதக்கோட்பாட்டின்படி அமைந்திருந்தது. அதனால் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அதற்கு பின்னர் நிக்கோலஸ் கோபர்னிக்கஸ் (1473-1543) சூரியன் மையக்கோட்பாட்டை (Heliocentric Theory)கூறினார். அதில் "நாம் இருப்பது சூரியக் குடும்பம். அதன் மையப்பகுதியில் சூரியன் உள்ளது. இதனை சுற்றியே பூமி வலம் வருகிறது'' என்றார். அதனை பல நூற்றாண்டுகளாக சமயவாதிகள் மறுத்து வந்தனர். இந்த நிலையில்தான் "கலீலியோ சூரியன்தான் மையப்பகுதி. பூமி உட்பட ஏனைய அனைத்து கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன' என்று புதிய விளக்கமளித்தார். வேண்டுமானால் நீங்களே தொலைநோக்கியில் பாருங்கள் என்று மக்கள் முன்னால் தனது ஆய்வை நிரூபித்தார். ஆனாலும் அவரது கருத்துகளை கிருத்துவ சமயவாதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. கிருத்துவ மத குருமார்களால் குற்றம்சாட்டப்பட்டார்.

கலீ-யோவின் புதிய அறிவியல் கருத்துக்கள் அபாயகரமானதெனவும் மதத்திற்கெதிரான கொள்கை எனக் கருதப்பட்டது. ஏனெனில் பைபிள் வாசகங்களில் Pslam 93: 1, Pslam 96: 10, மற்றும் Chronicles 16:30 போன்றவற்றில்.
" உலகம் விரிவுபடுத்தப்பட்டது. அதனால் நகர முடியாது.'' Pslam 104: 5 இல்
"கர்த்தர் பூமிக்கான அடித்தளத்தை இட்டார். அதனால் நகர முடியாது'' என்றுள்ளது. இதனை கலீலிலியோ கடுமையாக மறுத்தார். "பைபிள் பாடல்களையும், கவிதைகளையும் கொண்டது. இது வரலாற்று ஆவணமோ தகவல் களஞ்சியமோ இல்லை'' எனக்கூறி அதனை மறுத்தார். அதற் காக தாக்கப்பட்டார். மதத்திற்கு எதிரானவரென பிரச்சாரம் செய்யப்பட்டது.

1621- இல் கலீலியோ தனது முதல் நூல் "த அஸயேர்' (The Assayer) எழுதினார். ஆனால் வெளியிட அனுமதி கிடைக்காமல் இழுத்தடிக்கப்பட்டார். பின்னர் 1623-இல் வெளியிட அனுமதி கிடைத்தது. 1630-இல் Dialogue concerning the Two Chief World System வெளியிட அனுமதி கோரினார். அதனையும் 1632-ல் தான் வெளியிட அனுமதி கிடைத்தது. வரலாற்றில் உண்மையான கருத்துக்கள் கொண்ட நூல்கள் வெளியிட அவ் வப்போது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அதனையும் மீறி அந்த நூல்கள் வெளியில் வந்து தனது உண்மைகளை கூறி அறிவார்ந்த புரட்சியை ஏற்படுத்தியுள்ளதை காணலாம். கலீலியோ த அஸயேர் (The Assayer) அறிவியலை எதார்த்தத் துடன் போதித்தது. அந்நூலை "அறிவியல் அறிக்கை' (Scientific Manifesto)என்று அழைக்கப்படுகிறது. பல தடைகள் இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாது தனது அறிவியல் கருத்துக்களையும் கண்டுபிடிப்புகளையும் தொடர்ந்து வெளியிட்டார்.
அவரது கண்டுபிடிப்புகளில் புவியின் மையக் கோட்பாட்டி-ருந்து சூரிய மையக் கோட்பாடு பற்றிய அறிவியல் கருத்தை வெளியிட்டார், வியாழன் கோளை ஆராய்ந்து அதற்கான நான்கு துணைக்கோள்களை கண்டறிந்தார். இவை கலீலியோ நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன. தொடர்ந்து வால் நட்சத்திரங்களை ஆராய்ந்தார். முதன்முத-ல் சூரியனில் புள்ளிகளை (Sun Spots) கண்டறிந்து கூறினார். வெள்ளி, சனிக் கோள் களை ஆய்வு செய்தார். பூமியின் துணைக்கோளான நிலாவினை தொலைநோக்கி வழியே ஆய்வு செய்து அங்குள்ள மலைகளையும் பள்ளங்களையும் கண்டறிந்தார். அதனை கொண்டு நிலவினை வரைபடமாக்கி அளித்தார். இதுவே நிலா ஆராய்ச்சியில் மாபெரும் மைல்கல் ஆகும். இத்துடன் நெபுலா, பால் வீதி மண்டலம், நெப்டியூன் கோள் போன்றவற்றை ஆராய்ந்து கூறினார். அது மட்டுமல்லாது தொழில்நுட்பத்திலும் பல சாதனைகளை புரிந்தார். குறிப்பாக ஜியாமின்டிரி கருவி, தெர்மோமீட்டர், டெலஸ்கோப் போன்றவற்றை வடிவமைத்தார்.
இயற்பியலில் எந்திரவியல் மற்றும் பொருட்களின் பொருண்மை (Mass) பற்றிய அறிவியல் கருத்துக்களை உருவாக்கித் தந்தார். இவையே பின்னர் சர் ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும் ஆய்வு மூலமாக இருந்தன. அதனா லேயே கலீலியோ "நவீன இயற்பியலின் தந்தை' என அழைக்கப்படுகிறார். கலீலியோ இயற்பியல், கணிதவியல், வானவியல், தத்துவ அறிஞர். அறிவியல் புரட்சியில் முக்கியமான பங்காற்றியவர். பல அறிவியல் கருத்துக்களை சமயவாதிகளுக்கு பயப்படாமல் வெளியிட்டார். தனது கருத்துகளை உண்மையானவை என்று விளக்க கடுமையாக வாதாடினார். தமது வாழ்நாள் முழுவதும் சமயவாதிகளுக்கு எதிராக போராடினார்.
ஆனாலும் போப் ஆண்டவரால் கலீலியோவின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டன. வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். உலகில் முதன்முதலாக நவீன தொலைநோக்கியின் மூலம் வானத்தை பார்த்த அவரது அந்தக் கண்கள் இரண்டும் குருடாகி நோயின் பிடியில் பல காலம் வாழ்ந்தார். அப்போதும் தனது அறிவியல் கருத்துக்களை விடாப்படியாக பரப்பிவந்தார். இந்த அறிவியல் புரட்சியாளர் நோயின் கொடுமை தாங்காமல் இறந்து போனார். அவரது இறந்த உடலைக்கூட அவமரியாதை செய்ய மதபழமைவாதிகள் காத்திருந்தனர். அவரது நண்பர்களால் இரகசியமாக உடல் அடக்கம் செய்யப்பட்டது. தனது உண்மையான அறிவியல் கருத்துக்களுக்காக எப்போதுமே சமரசம் செய்யாமல் வாழ்நாள் முழுவதும் போராடி வந்தவர் கலீலியோ. இப்படிப்பட்ட சூழலில் சர்வதேச வானியல் ஆண்டில் நமது மனித அறிவியலின் ஆகச்சிறந்த போராளியான கலீலியோவை நினைவுக் கூர்ந்து அறிவியல் விழிப்புணர்வு ஆண்டாக இதனை அனுசரிக்க வேண்டிய கடமை நமக்குரியது.

Saturday, December 27, 2008

தேர்தலில் முதலீடு! ஆட்சியில் அறுவடை!


னநாயக நாட்டில் தேர்தல் என்பது மக்களுக்கான ஆயுதம் எனப்படுகிறது. அதே தேர்தல்தான் இந்திய அரசியல்வாதிகளுக்கு ஊழலின் தொடக்கமாக அமைந்திருக்கிறது. 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளை நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற நேரம். இந்த தேர்தல் முடிவுகள், நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு மிகுந்திருக்கிறது. தீவிரவாதிகளின் மும்பை தாக்குதல் நிகழ்வுக்குப் பிறகு இன்னும் கூடுதலாக.
தேர்தலில் எதிர்த்து நிற்கும் கட்சிகளை எதிர்கொள்வது ஒருபுறமென்றால், சொந்தக் கட்சியிலேயே எழும் கலகக் குரல்களை எப்படி சமாளிப்பது என்று குழம்பிப் போகின்றன தேசியக் கட்சிகள் எனச் சொல்லிக் கொள்ளும் பெரியகட்சிகள். இம்முறை, இந்தகலகக் குரல் முதன்மையாகவும், வலிமையாகவும் வெளிப்பட்டது காங்கிரஸ் கட்சியிலிருந்து. அதைத் தொடர்ந்து பா. ஜ. க. விலிருந்தும் கேட்கத் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர்களில் ஒருவர் மார்க்ரெட் ஆல்வா. முன்னாள் மத்திய அமைச்சர். அ. தி. மு. க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் அரசியல் நட்பாளர். அவரிடமிருந்துதான் முதல் கலகக் குரல் வெளிப்பட்டது. தனது மகன் நிவேதித்துக்கு கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது சீட்டு தரவில்லை என்பதுதான் இவரிடமிருந்து கலகக் குரல் வெளிப்படுவதற்கான காரணம்.
தன் மகனை மட்டும் முன்னிறுத்தினால் அது சுத்தமான சுயநலமாகிவிடும் என்பதால், பக்கத்து இலைக்கு பாயசம் என்பதுபோல, தன்னைப் போலவே மற்றொரு முன்னாள் மத்திய அமைச்சரான ஜாபர் ஷெரீப்பின் பேரனுக்கும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் சீட்டு மறுக்கப்பட்டது என்றும் சொன்ன ஆல்வா, தேர்தல் சீட்டுகளை கட்சி நிர்வாகிகள் விற்பனை செய்கின்றனர் எனப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இதுபோல சீட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன எனக் குற்றம்சாட்டி காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு தனது விலகல் கடிதத்தை அனுப்பினார் மார்க்ரெட் ஆல்வா. இவர்தான் மகராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளைக் கவனித்து மேலிடத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டிய பொறுப்பாளர் பதவியில் இருந்தவர்.
தனது பொறுப்பில் உள்ள எந்த மாநிலத்திலும் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக இதுவரை மேலிடத்திற்கு எந்த அறிக்கையும் தந்திராத ஆல்வாதான், தனது சொந்த மாநிலமான கர்நாடகத்தில் 6 மாதத்திற்கு முன் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் அதனால்தான் தனது மகனுக்கு சீட் தரவில்லை என்றும் ‘நியாயக்’ குரல் எழுப்பினார். அண்மையில் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துள்ள மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், ஜம்மு&காஷ்மீர் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் இரண்டு டஜன் வாரிசுகளுக்கு சீட்டுகள் கொடுக்கப்பட்ட நிலையில்தான், ஆல்வாவின் இந்தக் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெற்றது. அவர் பா. ஜ. க. வுக்குப் போக முடிவு செய்து விட்டார் என்றும் அதனால்தான் 6 மாதத்திற்கு முந்தைய கர்நாடக சட்டமன்றத் தேர்தல் குறித்து இப்போது பிரச்னையை உண்டாக்கி, தற்போது தேர்தலை சந்தித்த மாநிலங்களில் பா. ஜ. க. வுக்கு பலன் கிடைக்கும் வகையில் இப்படியரு குற்றச்சாட்டை சுமத்துகிறார் என்றும் காங்கிரஸ் கட்சியின் விசுவாசத் தலைவர்களிடமிருந்து எதிர்க்குற்றச்சாட்டு வெளிப்பட்டது.
காங்கிரஸ் கட்சியில் தேர்தல் சீட்டுகள் விற்பனையாவதேயில்லையா? இலவசத் திட்டங்கள் போல சீட்டுகளும் இலவசமாகத்தான் தரப்படுகிறதா? காங்கிரசில் மட்டுமல்ல, பழம்பெரும் தேசியக் கட்சியிலிருந்து புதிதாக முளைத்துள்ள மாநிலக் கட்சிவரை, தேர்தல் சீட்டுகள் என்பவை ஏதோ ஒரு வகையில் விற்பனைக்குரியவைதான். தேர்தல் நேரத்தில் கட்சிகளின் சார்பில் சீட்டு கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் கட்சித்தலைமை நேர்காணல் செய்கிறதே, அதில் என்ன வேட்பாளரின் தொலைநோக்குப்பார்வை, மக்கள் நலனுக்கு அவர் மேற்கொள்ளவிருக்கும் பணிகள் ஆகியவை பற்றியா கேள்விகள் கேட்கப்படுகின்றன? எவ்வளவு செலவு செய்யப்போகிறாய் என்பதுதான் அந்த நேர்காணலின் முக்கிய கேள்வி. சாதிபலம் பற்றியது இரண்டாவது கேள்வி. கட்சிக்குள் இருக்கும் செல்வாக்கு&ஒத்துழைப்பு இவையெல்லாம் கூட அடுத்தடுத்த கட்டங்கள்தான்.
தற்போதைய நிலையில் தமிழகத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் செலவு செய்ய தகுதியுடையவர்களைத்தான் பெரிய கட்சிகள் தங்களின் வேட்பாளராக நிறுத்தும். ஆக, சட்டமன்றத் தேர்தல் சீட்டு விற்பனைக்கான குறைந்தபட்ச ஏலத்தொகை 1 கோடி ரூபாய். இதைவிட கூடுதலாக செலவு செய்யத் தயாராக இருப்பவர்களில் ஒருவர் சீட் பெறுவதற்கு தகுதியுடையவராவார். நாடாளுமன்றத் தேர்தல் என்றால் இதைப்போல் 5 மடங்கு அல்லது 6 மடங்கு செலவு செய்தாக வேண்டும். இந்த வலிமை உள்ளவர்களுக்குத்தான் தேர்தல் சீட்டு. மார்க்ரெட் ஆல்வாவின் மகனுக்கு இந்த வலிமை இருந்திருக்கலாம். ஆனால், அவரை ஓரங்கட்டி சீட்டு வாங்கியவர் இன்னும் வலிமை உள்ளவராக இருந்திருக்கக்கூடும்.
1996 சட்டமன்றத் தேர்தலில் வைகோ போட்டியிட்டு தோல்வியடைந்த விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் தி. மு. க. வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றவர், கட்சியினருக்கு அதிக அறிமுகமில்லாத தொழிலதிபர் ரவிசங்கர். அவரது வலிமை பணம்தான். தேர்தல் செலவுக்காக, நிரப்பப்படாத காசோலையை கட்சித் தலைமையிடம் நீட்டி இதில் எவ்வளவு வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ளலாம் என்று இவர் சொன்னதாக அப்போது பெருமையாகப் பேசப்பட்டது. பின்னர் அந்த தொழிலதிபர் அ. தி. மு. க. வுக்குத் தாவி, அதன்பின் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கினார் என்பது இணைப்புச் செய்திகள்.
2004 நாடாளுமன்றத் தேர்தலின்போது, தேர்தல் செலவுக்காக இத்தனை இலட்சம் பணத்தை தலைமையிடம் செலுத்தவேண்டும் என தி. மு. க. வெளிப்படையாகவே அறிவித்தது. அ. தி. மு. க. அதை அறிவிக்கவில்லையே தவிர, தி. மு. க. வேட்பாளரை விட கூடுதலாகச் செலவு செய்யக் கூடியவர்களுக்கு சீட்டுகளை விற்றது. தோட்டத்து அப்பாயிண்ட்மென்ட்டுக்காக சூட்கேஸ்களுடன் சென்னை ஓட்டல்களில் அறை எடுத்து பல நாட்கள் தங்கியிருந்தவர்கள், என்ன விலைக்கு சீட்டுகள் விற்பனையாகின்றன என்பதை அறிந்து கொள்வதிலும் தங்களால் அந்த விலை கொடுக்க முடியுமா என்று கணக்கிட்டும் காத்திருந்தார்கள்.
ஊழலை ஒழிக்கப் போகிறேன் என மேடையில் டயலாக் பேசும் விஜயகாந்த், தனது கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர்களைக் களமிறக்க ஒவ்வொரு தொகுதியிலும் தொழிலதிபர்களைத் தேர்வு செய்து கட்சியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவர்களுக்குள்தான் சீட்டு விற்பனை நடக்கும்என்பதும் இத்தனை காலமாக கொடி&தோரணம் கட்டிக் கொண்டிருக்கும் ரசிகசிகாமணிகளுக்கு அதே வேலைதான் தொடர்ந்து கிடைக்கும் என்பதும் ஊரறிந்த ரகசியம்தான். பல கோடிகளை செலவுசெய்து எம். பி. யாக நினைக்கும் தொழிலதிபர்கள் அந்தச் செலவையெல்லாம் தர்ம கணக்கிலா எழுதுவார்கள்? தங்களின் புதிய தொழிலுக்கான முதலீடு இது என்பதே அவர்களின் கணக்கு. இந்த முதலீட்டுக்கான இலாபத்தை தேர்தல் வெற்றி மூலமாகவும் ஆட்சியில் பங்கேற்பதன் மூலமாகவும் பெறுகிறார்கள்.

வேறெந்த தொழிலிலும் கிடைக்காத அளவுக்கு பல மடங்கு இலாபத்தை கொட்டுகின்ற தொழிலாக ஆட்சியதிகாரமிக்க அரசியல் தொழில் இருக்கிறது. முதலீடு கையில் இருந்தும் அந்த இலாபத்தை அடையக்கூடிய வாய்ப்பு தன் மகனுக்கு கிடைக்கவில்லையே என்பதுதான் மார்க்ரெட் ஆல்வாவிடமிருந்து வெளிப்பட்ட குற்றச்சாட்டுக்கும் அவரது வெளியேற்றத்திற்கும் காரணமாக இருக்கும். தேர்தலில் சீட்டுகள் விற்பனை என்பது, கவுண்டமணி பாணியில் சொல்வதென்றால். . அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!
- கோவி.லெனின்